#Group2Mains_2023 ◆ பாரத்நெட் திட்டம்
பாரத் நெட் திட்டம் என்பது இந்தியாவில் இருக்கும் கிராம பஞ்சாயத்துகள் அனைத்துக்கும் இணைய வசதி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட திட்டமாகும்.
பாரத் நெட் - 1 திட்டம் 2011ல் தொடங்கப்பட்டது.
மருத்துவம், கல்வி மற்றும் இ-கவர்னன்ஸ் எனப்படும் மின் ஆளுகை ஆகியவைகளை நாடு முழுவதும் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் 13 மாநிலங்களைச் சேர்ந்த 10,000 கிராமங்களில் இணைய வசதி கொடுக்கும் பணிகள் கடந்த 2017 டிசம்பரில் நிறைவு பெற்றது.
பாரத் நெட் - 2 திட்டம் ஆகஸ்ட் 15, 2020-ல் இருந்து 1,000 நாட்களில் நாடு முழுவதும் இருக்கும் 6 லட்சம் கிராமங்களில் இணைய வசதி கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
விரிவுபடுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ், நாட்டின் 16 மாநிலங்களில் இருக்கும் கிராமங்களில் இணைய வசதி கொடுக்கப்பட இருக்கிறது.
பாரத் நெட் -2 திட்டத்தில் தமிழகத்தில் இருக்கும் 12,525 கிராமங்களுக்கு இண்டர்நெட் வசதி கொடுக்கப்பட இருக்கிறது.
தமிழகத்தின் கடலோர கிராமங்கள் தவிர மற்ற கிராமங்களில் மின்சார வாரியத்தின் 11/33 KV கேபிள் மூலமும் கடலோர கிராமங்களில் இதற்காக பூமிக்கு அடியில் புதிதாக ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலமும் இணைய வசதி அளிக்கப்பட இருக்கிறது. இதற்காக ரூ.1,230.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
பாரத்நெட் -2 திட்டம், தமிழக அரசின் “தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET)” என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் நான்கு தொகுப்புகளாக (A, B, C & D) பிரிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு A-ல் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, சென்னை (NOC), ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
தொகுப்பு B-ல் கடலூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
தொகுப்பு C-ல் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், கோயம்பத்தூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
தொகுப்பு D-ல் கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் செயல்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1 Gbps அளவிலான அலைக்கற்றை அனைத்து 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மின்னணு (டிஜிட்டல்) சேவைகள், இணையவழி கல்வி (e-Education), தொலை மருத்துவம் (Tele Medicine), இணையதள இணைப்பின் மூலம் வழங்கப்படும் சேவைகளான Triple Play Services (தொலைபேசி, தொலைக்காட்சி & இணையம்) ஆகியவற்றை வழங்க இயலும்.
மேலும், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், அதிவேக இணையதள சேவையினைப் பெறுவதன் மூலம் கிராம அளவில் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும்.
அதோடு, புதிய ஊரக வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார நிலை மேன்மையடையவும் இத்திட்டம் வழி வகுக்கும்.
தமிழகத்தின் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளும் பாதுகாப்பான மற்றும் விரைவான இணைய சேவைகளைப் பெறவும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான தகவல்தொழில்நுட்ப திறன் இடைவெளியைக் குறைக்கவும் இத்திட்டம் உதவிடும்.
ஓடிடி அபார வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் இந்த சூழலில் அடிப்படை வசதிகளைத் தாண்டியும் பொழுதுபோக்கு அம்சத்துக்காகவும் நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கும் இணைய வசதி அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் இருக்கும் 6,25,000 கிராமங்களில் தலா 2 முதல் 5 வைஃபை ஹாட்ஸ்பாட்டுகள் உருவாக்கப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. மொத்தம், 7,00,000 வைஃபை ஹாட் ஸ்பாட்டுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 2,50,000 கிராமங்களில் 100 Mbbs வேகம் கொண்ட இணைய இணைப்பு கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
Source : தமிழ் இந்து , தினமணி நாளிதழ், BBC Tamil & Google

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது